160 நாடாளுமன்ற உறுப்பினர்களை அந்தந்த தொகுதிகளின் வாக்காளர்களிடமிருந்து நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல் முறையைத் திருத்துவதற்குத் தேவையான சட்டங்களை உருவாக்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மீதமுள்ள 65 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய அல்லது மாகாண மட்டத்தில் விகிதாசார வாக்களிப்பு முறையின் படி தெரிவு செய்யப்பட வேண்டும். 2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் நோக்கங்களை பூர்த்தி செய்வதற்கும், முழுமையான ஜனநாயக ரீதியிலான தேர்தலை அடைவதற்கும் தற்போதைய தேர்தல் முறைமையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்து உரிய பரிந்துரைகளுடன் அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டது. 160 பாராளுமன்ற உறுப்பினர்களை அந்தந்த தொகுதிகளின் வாக்காளர்களிடமிருந்து நேரடியாக தெரிவு செய்வதற்கான ஆலோசனைகள் குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் எஞ்சிய 65 பாராளுமன்ற உறுப்பினர்களை தேசிய அல்லது மாகாண மட்டத்தில் விகிதாசார வாக்களிப்பு முறையின்படி தெரிவு செய்வதற்கும் பெரும்பான்மையினரின் உடன்பாடு இதற்காக பெறப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, திருத்தம் செய்வதற்கு பிரதமர் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தேவையான சட்டங்களை உருவாக்க சட்ட வரைவு ஆசிரியருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.